நெல்லை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் அம்பாசமுத்திரம், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிகளுக்கான செயல்வீரர்கள் கூட்டம் வீரவநல்லூரில் நேற்று நடந்தது. கூட்டத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ‘பாஜ ஆட்சியில் பொதுமக்கள், வணிகர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.ஜனநாயகத்தை பாதுகாக்க, நாட்டின் பன்முகத் தன்மையை பாதுகாத்திட மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
மீண்டும் பாஜ ஆட்சி அமைந்தால் இதுதான் கடைசி தேர்தலாக இருக்கும். வருங்கால சந்ததியினருக்கு தேர்தல் என்றால் என்ன, ஜனநாயகம் என்றால் என்பது தெரியாமல் போய் விடும். மோடி மீண்டும் பதவியேற்றால் மக்களாட்சி முடிந்து மன்னராட்சி மலரும். தமிழகத்தில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டபோது பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரவில்லை. வெள்ள நிவாரண நிதியாக ஒரு ரூபாய் கூட தரவில்லை. மக்களைப் பற்றி கவலைப்படாத பாஜ, அதிமுகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும்’ என்றார்.