புதுக்கோட்டை: பாஜகவுக்கு எதிராக செயல்படும் கட்சிகளை ஒடுக்கும் இயக்கமாகவே அமலாக்கத்துறை இருக்கிறது என்று கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் அரிமளம் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக கட்சிக்கொடியை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஏற்றி வைத்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அமலாக்கத்துறை முழுக்க முழுக்க பாஜகவுக்கு எதிராக செயல்படும் கட்சிகளை ஒடுக்கும் இயக்கமாகவே இருக்கிறது. அதனை கலைத்துவிட வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்.
அமலாக்க துறையை கலைத்து சிபிஐ-உடன் இணைத்து விடவேண்டும் என்று கூறினார். சிபிஐ-க்கு நடத்தை விதிமுறைகள் எல்லாம் உண்டு. சிபிஐ-க்கு இருப்பதுபோல் அமலாக்கத்துறைக்கு எந்தவிதமான விதிமுறைகளும் கிடையாது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய கார்த்தி சிதம்பரம், ஒருவர் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று விரும்புகிறாரோ அது அவரது உரிமை, சுதந்திரம். செந்தில் பாலாஜி சிகிச்சை பெறுவதை நடிப்பது என்று எதிர்க்கட்சிகள் கூறுவது மருத்துவ அறிக்கையை கொச்சைப்படுத்துவதாகும் என்று கடுமையாக சாடினார்.