கோபால்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே வீரசின்னம்பட்டியை சேர்ந்தவர் தனபால் (34). பாஜ ஒன்றிய செயலாளராகவும், மாவட்ட ஓபிசி அணி துணைத்தலைவராகவும் உள்ளார். இவர் நேற்று முன்தினம் மாவட்ட எஸ்பி பிரதீப்பிடம் அளித்த மனுவில், ‘தன்னை கட்சியை விட்டு ஓரம் கட்டும் நோக்குடன் திண்டுக்கல் பாஜ மாவட்ட தலைவர் தனபாலன் செயல்படுவதாக முகநூலில் பதிவிட்டிருந்தேன். இதை பார்த்த அவர், இப்பதிவுகளை நீக்கா விட்டால் அடியாட்களை வைத்து கொலை செய்து விடுவேன் என மிரட்டுகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.
இதற்கிடையே மாவட்ட தலைவரான தனபாலனுக்கு ஆதரவாக சாணார்பட்டி பாஜ ஒன்றிய தலைவர் மணிகண்டன் என்பவர், ஒன்றிய செயலாளர் தனபாலை கண்டித்து வலைத்தளங்களில் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு மாறி, மாறி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து இருவரும் சாணார்பட்டி போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஒன்றிய செயலாளர் தனபாலன், மணிகண்டனை கைது செய்தனர்.