டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பரபரப்பு நிலவி வருகிறது. மணிப்பூரில் மெய்டீஸ், குக்கி இனத்தவர்கள் இடையே 3 மாதத்திற்கும் மேலாக இனக்கலவரம் நீடிக்கிறது. இதில், பழங்குடியினமான குக்கி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் சென்ற வீடியோ நாட்டையே உலுக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டுமென கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதனால் அவைக்கு வருவதையே தவிர்த்த பிரதமர் மோடியை பேச வைக்க, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் மக்களவையில் ஒன்றிய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீதான 2 நாள் விவாதம் நேற்று பிற்பகல் 12 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் இன்று 2வது நாளாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு போட்டியாக பாஜக எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சி ஊழலில் திளைத்துள்ளதாக கூறி நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு பாஜக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழல், வாரிசு அரசியல் நாட்டை விட்டே வெளியேற வேண்டும் என்ற பதாகைகளுடன் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.