புதுடெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டம் வரும் 24ம் தேதி தொடங்குகிறது. 24 மற்றும் 25ம் தேதிகளில் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பார்கள். புதிய சபாநாயகர் தேர்தல் வரும் 26ம் தேதி நடக்கிறது. அதுவரை அவையை நடத்த தற்காலிக சபாநாயகராக மூத்த உறுப்பினர் ஒருவரை நியமிப்பது வழக்கம். அதன்படி, பாஜவை சேர்ந்த பத்ருஹரி மஹ்தாப்பை தற்காலிக சபாநாயகராக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இவர், ஒடிசா மாநிலம் கட்டக் தொகுதியில் இருந்து 7 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க, டி.ஆர்.பாலு(திமுக), கே.சுரேஷ்(காங்கிரஸ்), சுதீப் பண்டோபாத்தியாய்(திரிணாமுல்) உள்ளிட்ட 5 மூத்த உறுப்பினர்கள் தற்காலிக சபாநாயகருக்கு உதவுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.