ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டாக்டர் சரஸ்வதி. இவர் ஈரோட்டில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவருக்கு அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் அக்கட்சியில் இருந்து விலகி நாளை (இன்று) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைவதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
டாக்டர்.சரஸ்வதியின் மருமகனான ஆற்றல் அசோக்குமார், சமீபத்தில் பாஜவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். இதுகுறித்து பாஜ எம்எல்ஏ சரஸ்வதி கூறுகையில், ‘‘அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் நான் அதிமுகவில் இணைவதாக சமூக வலைதளங்களில் வரும் தகவல் தவறான தகவல். வேண்டுமென்றே பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்’’ என்றார்.