சென்னை: தேர்தல் நன்கொடை பத்திரம் ஊழல் விவகாரத்தில் பாஜ மீது விமர்சனம் வைக்காதது ஏன் என எடப்பாடி பழனிசாமிக்கு காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி துறை தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி.,எஸ்டி பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: அனைத்துக் கட்சிகளுக்கும் தேர்தல் நன்கொடை வழங்கும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. தேர்தல் நன்கொடை வழங்குவது வெளிப்படையாக நடந்தது.
ஆனால், மோடி ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் நன்கொடை பத்திரத்தை அறிமுகப்படுத்தினார். அதில், நன்கொடை கொடுப்பவர் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்று அறிவித்தது தான் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. இது குறித்து கேள்வியே கேட்க முடியாது என்றனர். அதேசமயம், தங்களுக்கு நெருங்கிய தொழிலதிபர்களுக்குப் பெரிய பணிகளை வழங்கிவிட்டு அதற்கு ஈடாக அதாவது லஞ்சமாக தேர்தல் நன்கொடை பத்திரங்களை பாஜக பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அதுமட்டுமின்றி, 32 நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறையும் சிபிஐ-யும் ரெய்டு நடத்தின. இந்த ரெய்டு நடத்தப்பட்ட சில தினங்களில் இந்த நிறுவனங்கள் தேர்தல் நன்கொடைப் பத்திரங்களை பாஜகவுக்கு அளித்தனர். அதாவது மிரட்டி தேர்தல் நன்கொடை வாங்கியிருக்கிறது பாஜக. ஊழல் செய்தும் விசாரணை அமைப்புகளை ஆயுதமாக வைத்து மிரட்டியும் 11 ஆயிரத்து 562 கோடி ரூபாய் அளவுக்கு தேர்தல் நன்கொடை பத்திரத்தை வழிப்பறிக் கொள்ளையன் போல் பறித்திருக்கிறது பாஜ.
இதை எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த தேர்தல் நன்கொடைப் பத்திரங்களுடன் ஒப்பிட முயல்கிறார்கள். தேர்தல் நன்கொடை பத்திரங்களை சட்டமாக்கிவிட்டு எதிர்க்கட்சிகளுக்கு எப்படி வந்தது என்று கேட்பது சிறுபிள்ளைத்தனமாகும். பாஜகவுக்கு மட்டும் 11 ஆயிரத்து 562 கோடி ரூபாய் தேர்தல் நன்கொடை வந்தது எப்படி என்ற கேள்விக்கு பாஜகவிடம் பதில் இருக்கிறதா? சலுகை காட்டியும் மிரட்டியும் பெறப்பட்ட தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் உலகே வியக்கும் வகையில் மெ்கா ஊழலைச் செய்துள்ளது பாஜ.
ஆனால், இங்கிருக்கும் எடப்பாடி பழனிசாமியோ, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் திமுகவை மட்டுமே குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். பாஜவுடன் இனி கூட்டணியே இல்லை என்று அறிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, உச்ச நீதிமன்றத்தில் அம்பலப்பட்ட பாஜ மீது விமர்சனம் வைக்காதது ஏன்? நாடு முழுவதும் பாஜவுக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் போது எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருப்பது சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. தேர்தல் நன்கொடைப் பத்திரம் விவகாரத்திலாவது அவர் பாஜவுக்கு எதிராக தைரியம் இருந்தால் விமர்சனத்தை வைக்கட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.