தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா, அதிமுக கூட்டணி முறிந்த பின் இரு கட்சி இடையே மாறி, மாறி நிர்வாகிகளை இழுக்கும் படலம் நடந்து வருகிறது. அதிமுகவில் இருந்து பல முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் பாரதிய ஜனதாவில் இணைந்து வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் குமரி மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யுமான விஜயகுமார் அதிமுகவில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்தார்.
இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்கப்பட்டு 6 ஆண்டுகள் அந்த பதவியில் இருந்தார். அதிமுகவின் மாவட்ட செயலாளராகவும் சுமார் 4 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பின் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் என அதிமுக இரு அணிகளாக பிரிந்த சமயத்தில் எந்த அணியிலும் இடம் பெறாமல் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். இவர் எம்.பி.யாக இருந்த போதே பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை அடிக்கடி சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன் இவர் திடீரென பாரதிய ஜனதாவில் இணைந்தார். இவருக்கு கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பா.ஜ. சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவதாக தகவல்கள் பரவின. பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் கூறி தான், அவர் பாரதிய ஜனதாவில் இணைந்ததாக தகவல்கள் பரவின. ஆனால் இதை குமரி மாவட்ட பா.ஜ. வினர் திட்டவட்டமாக மறுத்தனர். இது குறித்து விஜயகுமாரை தொடர்பு கொண்டு கேட்ட போது, ‘எதையும் எதிர்பார்த்து பா.ஜ.வில் இணையவில்லை.
எந்த சமயத்திலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீதான எனது பற்று குறையாது. என்னை பற்றி குறை கூறுபவர்களை பற்றி நான் கவலைப்படுவதில்லை. இப்போதைக்கு வேறு எதுவும் பேச விரும்ப வில்லை’ என்றார். இதற்கிடையே தற்போது அதிமுக மீது வெறுப்பில் உள்ள முன்னாள் நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி, பாரதிய ஜனதாவில் இணைவார்கள் என்ற தகவலும் உள்ளது. முன்னாள் மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் சிலர் பாரதிய ஜனதாவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளிடம் பாரதிய ஜனதா நிர்வாகி ஒருவர் ரகசிய டீலிங் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.