லக்னோ: உபி மேயர் தேர்தலில் 17 இடத்தையும் கைப்பற்றிய பாஜ, அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தியதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டி உள்ளார். உத்தரப்பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக லக்னோ, வாரணாசி, அயோத்தி உள்ளிட்ட 17 மாநகராட்சி மேயர் இடங்களையும் வென்று பாஜ சாதனை படைத்தது. 17 மாநகராட்சிகளிலும் பகுஜன் சமாஜ் போட்டியிட்டு தோற்றது. இந்த தேர்தல் முடிவு குறித்து பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி நேற்று டிவிட்டர் பதிவில், ‘‘தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசு இயந்திரத்தை பாஜ தவறாக பயன்படுத்தியதை பார்த்து பகுஜன் சமாஜ் அமைதியாக இருக்கப் போவதில்லை.
இந்த தேர்தலில் ஜெயிக்க சாம, தான, பேத, தண்ட என அனைத்து வழிகளையும் பாஜ பயன்படுத்தியது. நேரம் வரும்போது இதற்கான விளைவுகளை பாஜ நிச்சயம் சந்திக்கும். இந்த தேர்தல் சுதந்திரமாக, நேர்மையாக வாக்குச்சீட்டு முறையில் நடந்திருந்தால் பகுஜன் சமாஜ் வென்றிருக்கும். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெறுவதில் பாஜ, சமாஜ்வாடி இரண்டுமே சமமான திறமை வாய்ந்தவை. எனவே பாஜ வென்றது பெரிய விஷயமில்லை’’ என்றார்.