பெரியகுளம்: பாஜ மாவட்ட பொறுப்பாளர்களை நீக்கக்கோரி அக்கட்சியினரே போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அரசியல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. அதே நேரம் கட்சிகளிடையே போஸ்டர் யுத்தம் துவங்கியுள்ளது. ஆனால், பாஜ கட்சியில் மட்டும் அவர்களது கட்சிக்குள்ளே எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். தேனி நாடாளுமன்ற தொகுதி பாஜ பொறுப்பாளராக, ஊராட்சி மாவட்ட கவுன்சில் உறுப்பினர் ராஜபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக பெரியகுளம் சட்டமன்ற தொகுதி பாஜ கட்சி சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், ‘‘நீக்கிடு.. வசூல் மன்னர் ராஜபாண்டியனை நீக்கிடு… எதிர்கட்சிக்கு விலை போன, கட்சி தொண்டனின் தலையை அடகு வைத்து பணம் வசூலிக்கும், கட்சியை சீர்குலைக்கும், பாஜ அலுவலக கட்டிட நிதி மோசடி மன்னன் ராஜபாண்டியனை, தேனி நாடாளுமன்ற பொறுப்பாளராக நியமித்ததை நீக்கிடு… நீக்கிடு…. இந்த ஊழலுக்கு துணை போகும் முன்னாள் மாவட்டத்தலைவர் பி.சி.பாண்டியன் மற்றும் முன்னாள் கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாளை வன்மையாக கண்டிக்கிறோம்’’ என அவர்களது புகைப்படங்களுடன் ஒட்டப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பாஜ முன்னாள் பொறுப்பாளர்களான செந்தில்குமார், முருகதாஸ் ஆகியோர், கட்சிக்கு களங்கம் விளைவித்து கெட்ட பெயரை ஏற்படுத்தும் விதமாக போஸ்டர்கள் ஒட்டி அவதூறு பரப்பி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பெரியகுளம் டிஎஸ்பி நல்லுவிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. பாஜ மாவட்ட நிர்வாகிகளை நீக்கக்கோரி சொந்தக் கட்சியினரே போஸ்டர்கள் ஒட்டியதும், அவர்கள் மீது நடவடிக்கை கோரி மனு அளிப்பதும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.