புதுச்சேரி: ஒன்றியத்தில் அமையப்போகும் பாஜ கூட்டணி ஆட்சி விரைவில் கலைந்துவிடும் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார். இதுகுறித்து புதுவையில் நேற்று அவர் அளித்த பேட்டி : மோடி பிரதமர் நாற்காலியில் ஒட்டிக்கொண்டு, மாநில கட்சிகளுக்கு அடிபணிந்து, பிரதமராக பதவியேற்கவுள்ளார். இது பாஜவுக்கும், மோடிக்கும் மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நாட்டு மக்கள், தகுந்த நேரத்தில் பாஜவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்கள். உண்மையிலே பிரதமர், சிறந்த அரசியல்வாதியென்றால் பிரதமர் பதவியை நாடி சென்றிருக்க கூடாது. வெளிநாட்டு ஊடகங்கள் எல்லாம், மோடியின் அராஜகத்தும், அகம்பாவத்துக்கும் இந்திய மக்கள் தகுந்த பாடம் கொடுத்துள்ளனர் என புகழாரம் சூட்டியுள்ளன.
எனவே இந்த ஆட்சி குறைபிரசவமாகத்தான் இருக்கும். 5 ஆண்டுகாலம் இந்த ஆட்சி நடைபெறாது. சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ்குமாரும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள். மோடியின் சர்வாதிகார போக்கு அவர்களுக்கு ஒத்துவராது. ஆகவே இந்த ஆட்சி வெகு விரைவில் கலைந்துவிடும். கூட்டணி கட்சிகளே அவர்களை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். புதுச்சேரியில் வைத்திலிங்கம் வெற்றியின் மூலம் மாநில மக்கள், ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் என்பது தெளிவாகிறது. முதல்வர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே ரங்கசாமி தார்மீக பொறுப்பேற்று கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.