டெல்லி: பாஜகவால் மக்களின் வலியை உணர முடியாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்பிக்கள் கருப்பு உடையில் முழக்கமிட்டனர். இதனால் இரு அவைகளும் 6வது நாளாக முடங்கியது. இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய வீடியோ ஒன்றை காங்கிரஸ் கட்சி தனது பக்கத்தில் வெளியிட்டது. அதில்; மணிப்பூருக்கு நேரில் செல்லாமலும், பிரச்னை குறித்து பேசாமலும் இருக்கிறார் பிரதமர் மோடி. ஏனென்றால் அவர் ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்த சிலருக்கு மட்டுமே பிரதமராக இருக்கிறார். தன்னுடைய சித்தாந்தம் தான் மணிப்பூரை எரித்தது என்று பிரதமருக்கு தெரியும்.
அதனால் தான் அவர் அமைதியாக இருக்கிறார். பதவியை பெறுவதற்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் எதுவேண்டுமானாலும் செய்யும். பதவிக்காக மணிப்பூரை மட்டுமல்ல, இந்த உலகத்தையும் அழிப்பார்கள். நாட்டில் ஏற்பட்டுள்ள துயரம் மற்றும் வலியைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லை. இந்தியர்கள் காயப்படும்போதெல்லாம், அவர்களின் வலியை நம்மால் உணர முடியும், ஆனால் பாஜகவினரும், ஆர்.எஸ்.எஸ்-ம் அந்த வலியை உணர மாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் இந்தியாவை பிரிக்க விரும்புகிறார்கள் இவ்வாறு கூறினார்.