ஜபல்பூர்: தனிப்பட்ட பிரச்னை காரணமாக பாஜ பெண் நிர்வாகியை கொன்ற கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்த சானா கான்(34) கிழக்கு மகாராஷ்டிராவில் பாஜ சிறுபான்மை பிரிவு செயல்பட்டாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவரது கணவர் அமித் சாஹு என்கிற பப்பு(37). சாலையோர உணவு கடை நடத்தி வருகிறார். கடந்த வாரம் சானா கான் திடீரென்று மாயமானார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மாயமானவரை காவல்துறையினர் தேடி வந்தனர். இதுதொடர்பாக அமித் சாஹுவிடமும் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் பணம் மற்றும் சொந்த பிரச்னைகள் காரணமாக தன் மனைவி சானா கானை கொன்று உடலை ஆற்றில் வீசியதாக அமித் சாஹு காவல்துறையிடம் உண்மையை ஒத்து கொண்டுள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.