அயோத்தி: ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் தொகுதியில் பாஜ வேட்பாளர் லல்லு சிங் தோல்வி அடைந்தார். இந்நிலையில் உத்தரபிரதேச அமைச்சர்கள் ஜெய்வீர் சிங் மற்றும் சூர்ய பிரதாப் ஷாஹி ஆகியோர் நேற்று முன்தினம் மாலை ஃபைசாபாத்தில், பாஜவின் தோல்வி குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் எஸ்பி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அப்போது, பாஜ தோல்வி அடைந்ததற்கு இந்த 2 அதிகாரிகள்தான் காரணம் என்று அனுமன்கர்கி கோயிலின் தலைமை அர்ச்சகர் ராஜூ தாஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அவருக்கும் கலெக்டர் நிதிஷ்குமார், எஸ்பி கரன் நய்யாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் ராஜூ தாஸின் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த காவலர்கள் 3 பேரும் திரும்ப பெறப்பட்டுள்ளனர். ஆனால் “பொதுமக்களை குறிப்பாக வணிகர்களை அச்சுறுத்த பாதுகாப்பு காவலர்களை ராஜூ தாஸ் பயன்படுத்தியதால் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.