வட மாநிலங்களில் வாட்டியெடுக்கும் குளிர்: பனிமூட்டத்தால் விமானங்கள், ரயில்கள் தாமதம்; பயணிகள் கடும் அவதி


புதுடெல்லி: வடமாநிலங்களில் வாட்டியெடுக்கும் கடும் குளிர் மற்றும் பனிமூட்டத்தால் விமானங்கள், ரயில்கள் தாமதமானது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். வட மாநிலங்களில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கடுமையான பனிப்பொழிவு நீடிக்கிறது. இதனால் இம்மாத தொடக்கத்தில் டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கடந்த வாரம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. தொடர்ந்து உறைய வைக்கும் குளிர் நீடிப்பதால் இந்த வாரம் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. பீகாரில் வரும் 20-ம் தேதி வரை, 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் செயல்படாது என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. அதேபோல் டெல்லி உள்ளிட்ட பல வட மாநிலங்களில் நேற்று வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. உத்தர பிரதேசத்தில் பள்ளி வேலை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றும் பல மாநிலங்களில் கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் இருந்தது. இதனால் டெல்லி ரயில் நிலையத்துக்கு வரவேண்டிய ரயில்கள் மிகவும் தாமதமாக வந்தன. இதனால் ரயிலுக்கு காத்திருந்தவர்களும், ரயில்களில் வருபவர்களை அழைத்து செல்ல வந்தவர்களும் ரயில் நிலையத்தில் வெகு நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் கடும் பனி மூட்டம் நிலவியதால் 100-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நேற்று வரை 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்திறங்கின. அதேபோல் 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (ஐஜிஐஏ) ஏராளமான விமானங்கள் புறப்பட தாமதமாயின. மேலும் டெல்லிக்கு வரவேண்டிய விமானங்களும் தாமதமாக வந்திறங்கின.

டெல்லியில் நேற்று மட்டும் 53 விமானங்கள் (21 உள்நாட்டு வருகை, 16 உள்நாட்டு புறப்பாடு, 13 வெளிநாட்டு புறப்பாடு, 3 வெளிநாட்டு வருகை) ரத்து செய்யப்பட்டன. மேலும் 120 விமான சேவைகள் தாமதமாயின என்று டெல்லி விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. இதேபோல் உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பனிமூட்டம் காரணமாக நேற்று ஏராளமான விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. மேலும் சில விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. அதே நேரத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்று தலைநகர் டெல்லிக்கு வரும் 18 ரயில்கள் தாமதமாக வந்து சேர்ந்தது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

பாட்னாவில் பள்ளிகளுக்கு 20ம் தேதி வரை விடுமுறை
பீகார் மாநிலத்தில் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் அளவிற்கும் குறைவாக பதிவாகியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அடுத்த 2 நாட்களுக்கு பனிப்பொழிவு நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கடும் குளிர் காரணமாக பீகார் தலைநகர் பாட்னாவில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 20ம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?