ஈரோடு: ஈரோடு, கள்ளுக்கடை மேடு, ராஜாஜி வீதியை சேர்ந்தவர் பாலமுருகன் மகன் கவின்குமார் (20). மருந்து கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். சமீபகாலமாக குடிப்பழக்கம் மற்றும் போதை ஊசி பழக்கத்திற்கு அடிமையானதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 15ம் தேதி கவின்குமார் இரவு தனது பிறந்தநாளை நண்பர்களோடு கொண்டாடினார். வீட்டிற்கு முன்பாக கேக் வெட்டி கொண்டாடிவிட்டு வீட்டிற்குள் வந்த சிறிது நிமிடத்தில் கவின்குமாருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி கவின்குமார் இறந்தார்.