திருத்தணி: திருத்தணி அருகே, பீரகுப்பத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் நூற்றுக்கணக்கில் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் மாதாந்திர பரிசோதனைக்காக வந்து செல்கின்றனர். இவர்கள், திருத்தணி-சோளிங்கர் மாநில நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள பீரகுப்பம் பேருந்து நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக இந்த நிழற்குடை அருகே செடிகொடிகள் அடர்த்தியாக வளர்ந்து, விஷ ஜந்துக்களின் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அப்பேருந்து நிழற்குடையை பயன்படுத்த அச்சம் தெரிவித்தனர். மேலும், பேருந்து நிழற்குடையை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள செடிகொடிகளை அகற்றி தூய்மைப்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பான செய்தி தினகரன் நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் வெளியாபது. அதன் எதிரொலியாக, நெடுஞ்சாலைத்துறை திருத்தணி கோட்ட உதவி பொறியாளர் ரகுராமன் உத்தரவின் பேரில் சாலைப் பணியாளர்கள் பேருந்து நிழற்குடையை ஆக்கிரமித்து வளர்ந்திருந்த செடிகொடிகளை நேற்று அகற்றினர். இதனால் எவ்வித அச்சமுமின்றி பயணிகள் பேருந்து நிழற்குடையில் அமர்ந்து பயணம் செய்கின்றனர்.