பில்கிஸ் பானு வழக்கு குஜராத் அரசு மீது வைத்த விமர்சனத்தை நீக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: பில்கிஸ் பானுவை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குஜராத் அரசுக்கு எதிராக முன்வைத்த விமர்சனத்தை நீக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு கலவரம் வெடித்தது. அப்போது பில்கிஸ் பானு என்ற 21 வயது மதிக்கத்தக்க 5 மாத கர்ப்பிணியை கும்பல் பலாத்காரம் செய்தது. அவரது 3 வயது குழந்தை உள்பட குடும்பத்தில் 7 பேரை படுகொலை செய்தது.

இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு சிறை தண்டனைவழங்கப்பட்டது. இந்த நிலையில் 11 குற்றவாளிகளும் குஜராத் அரசால் 2022 ஆகஸ்ட் 15ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து பில்கிஸ் பானு செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி 8ம் தேதி குற்றவாளிகள் 11 பேரை விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்தது. அப்போது குஜராத் அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தது.

இந்த விமர்சனங்களை நீக்க கோரி குஜராத் அரசு சார்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் , உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி குஜராத் அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் ‘உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்தில் எந்த தவறும் இல்லை. எனவே கருத்துக்களை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் எந்த தகுதியும் இல்லை என்பதில் நாங்கள் திருப்தி அடைகிறோம். எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related posts

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் முற்றிலும் குறைக்க வேண்டும்

கொத்தக்குப்பத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை!

பொள்ளாச்சி, திருப்பூர் பகுதியில் தென்னையில் வேர் அழுகல் நோய் தடுப்பு பணி ரூ.25 கோடியில் மேற்கொள்ளப்பட்டது