தேன்கனிக்கோட்டை: வனப்பகுதியில் இருந்து சாலைக்கு வந்த யானைகள், அவ்வழியாக பைக்கில் சென்ற வாலிபரை தூக்கி வீசி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதி நொகனூர் காப்புக்காட்டில் 50 யானைகள் முகாமிட்டுள்ளன. நேற்று மாலை, தேன்கனிக்கோட்டையில் இருந்து அஞ்செட்டி செல்லும் சாலையில் உள்ள மரக்கட்டா கிராமம் அருகே, யானைகள் இரண்டு குழுவாக பிரிந்து சாலையை கடந்து, தாவரகரை வனப்பகுதிக்கு சென்றன. யானைகள் விரட்டும் பணியின் காரணமாக, சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. யானைகள் சாலையை கடந்து சென்ற பிறகு, வாகன போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.
அப்போது, ஓசூரில் மெடிக்கல் ரெப்பாக பணியாற்றி வந்த அஞ்செட்டியை சேர்ந்த பச்சமுத்து மகன் அருள்குமார்(20) என்பவர், பைக்கில் அஞ்செட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
யானைகள் சென்று விட்டதாக கருதிய நிலையில், திடீரென 5 யானைகள் சாலையை நோக்கி வந்துள்ளன. அதில் ஒரு யானை, அவ்வழியாக சென்ற அருள்குமாரை பைக்குடன் தூக்கி வீசி விட்டுச் சென்றது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்ட பொதுமக்கள், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, அவர் உயிரிழந்தார்.