வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த பைக்கை திருடிய மர்ம ஆசாமிகள்: சிசிடிவி பதிவை வைத்து விசாரணை

பொன்னேரி: வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த பைக்கை மர்ம ஆசாமிகள் லாவகமாக திருடிச் செல்லும் சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்னேரி அங்கமுத்து தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகரன். தனியார் நிறுவன ஊழியரான இவர் தனது வீட்டின் வாசல் முன்பு பைக்கை நிறுத்தி வைப்பது வழக்கம். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் தனது பைக்கை வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலை அவரது பைக் மாயமாகியிருந்தது. இதனையடுத்து தனது பைக்கை காணவில்லை என பொன்னேரி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், வீட்டின் முன்பு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், சம்பவத்தன்று அதிகாலையில் ராஜசேகரனின் வீட்டின் வெளியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் சிறிது தூரம் சென்றுள்ளனர். பின்னர் அதில் ஒருவர் மட்டும் வந்து லாவகமாக ராஜசேகரனின் பைக்கை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு