செய்யூர்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கீழ்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுசீந்திரன் (44). கூலித்தொழிலாளி. இவரது மனைவி அன்பரசி (38). இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன் பைக்கில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செய்யூர் அருகே கூவத்தூரில் தங்களின் உறவினர் வீட்டுக்கு வந்திருந்தனர். பின்னர் அன்றிரவே இத்தம்பதி பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். பைக்கை சுசீந்திரன் ஓட்டி வந்துள்ளார்.
இவர்கள் கடப்பாக்கம் அருகே பைக்கில் வந்தபோது, எதிர்புறத்தில் புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த கார் மோதியது. இவ்விபத்தில் பைக்கில் வந்த தம்பதிகளான சுசீந்திரன், அன்பரசி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சுசீந்திரன் பரிதாபமாக பலியானார். அன்பரசி உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இப்புகாரின்பேரில் சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடிபோதையில் காரை ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்திய நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் ரூபேஷ் (33) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.