பாட்னா: பீகாரில் இணைப்பு சங்கிலி அறுந்ததால் எக்ஸ்பிரஸ் ரயில் இரண்டாக பிரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் இருந்து மேற்கு வங்க மாநிலம் இஸ்லாம்பூர் நோக்கி மகத் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. பீகாரின் பக்ஸர் மாவட்டம் டிவினிகஞ்ச் மற்றும் ரகுநாத்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று காலை 11 மணி அளவில் ரயில் வந்த போது, எஸ்6 மற்றும் எஸ்7 பெட்டிகளை இணைந்திருந்த இணைப்பு சங்கிலி திடீரென அறுந்தது.
இதனால் ரயில் இரண்டாக பிரிந்தது. உடனடியாக இதை கவனித்த ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார். தகவல் அறிந்த ரயில்வே தொழில்நுட்ப நிபுணர்கள் அதிகாரிகள் விரைந்து வந்து சங்கிலி இணைப்பை சரி செய்தனர். இதன் பின் பிற்பகல் 2.25 மணி அளவில் ரயில் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.