பாட்னா: பீகாரில் அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியார் நிறுவனங்களில் டியூஷன் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில கல்வித்துறை எச்சரித்துள்ளது. பீகார் கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கே.கே.பதக் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “ அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியார் நிறுவனங்களில் டியூஷன் எடுப்பது கண்டறியப்பட்டால் துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த ஆசிரியர்களை பணியில் அமர்த்தும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுதேர்வுகள் நடக்கும்போது அனைத்து ஆசிரியர்களும் பணியில் இருப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அப்போது விடுமுறை எடுக்கும் ஆசிரியர்களை கண்காணிக்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.