பாட்னா: பீகார் மாநிலம் சம்பரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதும், அதனை பருகும் நபர்கள் உயிரிழப்பதும் தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், கிழக்கு சம்பரண் மாவட்டம் துர்குலியா, பஹர்பூர் கிராமத்தை சேர்ந்த பலர் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கள்ளச் சாராயம் வாங்கி அருந்தியுள்ளனர்.இதனால் பலருக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்ட போலீசார் மோதிஹாரி, பஹர்பூர், துர்குலியா, ஹர்சுத்தி, சுகவுலி ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்ற 20 பேர், மேலும் கிழக்கு சம்பரண் மாவட்டம் முழுவதும் கள்ளச்சாரய விற்பனையில் ஈடுபட்ட 60 பேர் உள்பட 80 பேரை கைது செய்துள்ளனர். மேலும், கள்ளச்சாராய பழக்கத்தை தடுக்க தவறியதாக 5 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 11 காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.