ஆனாலும், ஐக்கிய ஜனதா தளம், பாஜ கூட்டணி ஆட்சியில் முதல்வர் பதவி நிதிஷ் குமாருக்கு வழங்கப்பட்டது. பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜ தனது கட்சியையே உடைக்க திட்டம் தீட்டுகிறது என குற்றம்சாட்டிய நிதிஷ்குமார் கடந்த 2022ம் ஆண்டு கூட்டணியை முறித்துக் கொண்டு, ஆர்ஜேடியுடன் இணைந்து புதிய ஆட்சி அமைத்தார். அதுமட்டுமின்றி, வரும் மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்கொள்ள வலுவான இந்தியா கூட்டணி அமைய நிதிஷ் அடித்தளமாக செயல்பட்டார். இக்கூட்டணியில் ஒருங்கிணைப்பாளர் பதவி நிதிஷுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு கூட்டணியில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை ஏற்க மறுத்த நிதிஷ் அதிருப்தியில் இருந்தார்.
இந்நிலையில், இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்த அவர், ஆர்ஜேடி உடனான கூட்டணியையும் முறித்துக் கொண்டு மீண்டும் பாஜவுடன் இணைய முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின. இது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று காலையில் தனது ராஜினாம கடிதத்தை வழங்கினார். நிதிஷ் குமார் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக பீகார் ஆளுநர் மாளிகை அறிவித்தது.