கூடுவாஞ்சேரி அருகே குளிர்பான கடை ஷட்டரை திறந்து நகைக்கடை சுவரில் துளையிட்டு 92 சவரன் நகைகள் கொள்ளை: 4 சிசிடிவி கேமராக்கள் உடைப்பு, மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

சென்னை: கூடுவாஞ்சேரி அருகே பாண்டூரில் குளிர்பான கடையின் ஷட்டரை திறந்து உள்ளே புகுந்த ஆசாமிகள், நகை கடை சுவரில் துளையிட்டு அங்கிருந்த 92 சவரன் நகை, 4 கிலோ வெள்ளி மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளை அடித்துவிட்டு சென்றுள்ளனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட தங்கப்பாபுரம், வஉசி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (54).

இவர் கூடுவாஞ்சேரி நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள பாண்டூரில் நகை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். இவரது கடை அருகிலேயே பாண்டூரை சேர்ந்த பூபதி (50) என்பவர் குளிர்பான கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பகுதி மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் கடையின் பின்பக்கம் வழியாக இருந்த ஷட்டரை திறந்து உள்ளே புகுந்து குளிர்பான கடையிலிருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்துள்ளனர்.

பின்னர் அந்த கடையின் சுவரின் வழியாக துளை போட்டு நகைக் கடையில் புகுந்து நகைக் கடையில் இருந்த சுமார் 92 சவரன் நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளையர்களின் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக கடை முன்பு இருந்த 4 சிசிடிவி கேமராக்களை உடைத்து மழைநீரில் தூக்கி வீசி எறிந்து விட்டு சென்றுள்ளனர். நேற்று காலை வழக்கம் போல் வந்த கடை உரிமையாளர்கள் கடைகளை திறந்து பார்த்தனர்.

அப்போது நகை மற்றும் பணம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனே கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தனர். போலீஸ் உதவி கமிஷனர் ஜெயராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வர வைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது

மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்