Wednesday, September 18, 2024
Home » 65 வயதுக்கு மேற்பட்ட 8 சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினை பொக்கிஷம் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

65 வயதுக்கு மேற்பட்ட 8 சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினை பொக்கிஷம் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

by MuthuKumar
Published: Last Updated on

சென்னை: 65 வயதுக்கு மேற்பட்ட 8 சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினை பொக்கிஷம் விருதுகளை தலைமைச்செயலகத்தில் வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கைவினை தொழில் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் 10 கைவினை கலைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகள் 2022-2023-ம் ஆண்டுக்கான விருதுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழக கைதறி தொழில் வளர்ச்சி கழகத்தின் சார்பாக கைவினை தொழிலுக்காகவே பல்வேறு கைவினை பொருட்களை உருவாக்க கூடிய கைவினை கலைஞர்களுக்கு வாழும் பொக்கிஷம் விருது வழங்கப்படுகிறது. வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை 8 சிறந்த கைவினைஞர்களுக்கும் பூம்புகார் மாநில விருதுகளை 10 சிறந்த கைவினைஞர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (16.7.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், கைவினைத் தொழிலுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட 8 சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளையும், கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகள் ஆகியவற்றில் சிறந்த 10 கைவினைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளையும் வழங்கி சிறப்பித்தார்.

கைவினைத் தொழிலுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட சிறந்த கைவினைஞர்களுக்கு தமிழ்நாடு அரசால் “வாழும் கைவினைப் பொக்கிஷம்’’ எனும் விருது வழங்கப்படுகிறது. கைவினைஞர்களை பாராட்டுவதற்கும், அவர்களின் திறனை ஊக்குவிப்பதற்கும், அதன்மூலம் திறனை வெளிக்கொணர்ந்து மற்றவர்களை ஊக்குவிப்பதற்கும் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தால் இவ்விருது ஆண்டு தோறும் 15 இலட்சம் மதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது. வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதிற்காக ஒவ்வொரு பிரிவிற்கும் ஒருவர் வீதம் தலா 8 கிராம் தங்கப் பதக்கம், தாமிர பத்திரம், சான்றிதழுடன் ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்படுகிறது.

அதன்படி, 2022-23ஆம் ஆண்டிற்கான “வாழும் கைவினைப் பொக்கிஷம்’’ விருதுகளை – காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ந. பாலகிருஷ்ணன் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி. உமாபதி (பித்தளை கலைப்பொருட்கள்), திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சா. ராஜகோபால் (சுடு களிமண்), திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ந.மணி ஆச்சாரி (கற்சிற்பம்), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சி. முத்துசுவாமி ஆச்சாரி (கோவில் நகைகள்), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சு. கோவிந்தராஜ் (இசைக் கருவி), திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ப. சுலைகாள் பீவி (கோரைப் பாய் நெசவு) மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த செ. தங்கஜோதி (இயற்கை நார்பொருட்கள்) ஆகிய 8 விருதாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதிற்கான தலா 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, 8 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

“பூம்புகார் மாநில விருது” தமிழ்நாட்டின் சிறப்பான கைவினைஞர்களின் கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகளை கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக பத்து கைவினைஞர்களுக்கு ஆண்டு தோறும் 12 இலட்சம் ரூபாய் மதிப்பில் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுகள் 50,000/- ரூபாய் பரிசுத் தொகை, 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிரபத்திரம் மற்றும் தகுதிச் சான்றிதழும் கொண்டதாகும்.

அதன்படி, 2022-23ஆம் ஆண்டிற்கான பூம்புகார் மாநில விருதுகளை – தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சி. ரவி மற்றும் ச. நாகலெட்சுமி, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மா. ராஜப்பா (தஞ்சாவூர் ஓவியம்), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. ம. முருகேசன் (இசைக்கருவி), ரா. லோகநாதன் (தஞ்சாவூர் கலைத்தட்டு), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ந. பூவம்மாள் (சித்திரத் தையல்), செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ப. வரதன் (கற்சிற்பம்), மு. ராஜரத்தினம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ரா. சக்திவேல் (மரச்சிற்பம்), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த செ. லில்லி மேரி (மூங்கில் பாய் ஓவியம்) ஆகிய 10 விருதாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பூம்புகார் மாநில விருதிற்கான தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி கவிதா ராமு, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

You may also like

Leave a Comment

19 − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi