பெங்களூரு: பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தேகப்படும் நபரின் சிசிடிவி காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. பெங்களூருவில் இந்திரா நகர், ஜே.பி.நகர், ராஜாஜி நகர், குந்தலஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் பிரபல ராமேஸ்வரம் கபே ஓட்டலில், வழக்கமாகவே மதிய உணவு நேரத்தில் கூட்டம் அதிகம் இருக்கும். இந்நிலையில், நேற்று மதியம் 1.30 மணியளவில் ஓட்டலில் கை கழுவும் வாஷ் பேசின் பக்கத்தில் மர்ம பையில் இருந்த 2 வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறியது. குண்டு வெடித்ததில் உணவக ஊழியர்கள் 3 பேர், ஒரு பெண் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.
இவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்பகுதியை அடைத்து, தீவிர விசாரணையை தொடங்கினர். தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ) அதிகாரிகள் குழுவும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். முதலில் ஓட்டலில் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. பின்னர் பையில் இருந்த மர்மப்பொருள் வெடித்ததாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் வெடித்தது வெடிகுண்டு தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
ஓட்டலில் அடுத்தடுத்து 10 விநாடி இடைவெளியில் 2 குண்டுகள் வெடிக்கும் சி.சி.டி.வி காட்சிகளை பெங்களுரு போலீசார் வெளியிட்டுள்ளனர். இந்த காட்சிகளில் குண்டுகள் வெடித்ததும் எழுந்த புகைமூட்டம், இடிபாடுகளில் சிலர் சிக்கி கிடப்பது, மற்றவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடிக்கும் காட்சிகள் காண்போரை பதற வைக்கிறது. இதனைத் தொடர்ந்து ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தேகப்படும் நபரின் சிசிடிவி காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. குண்டுவெடிப்பு வழக்கில் ஒருவரை போலீஸ் கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.