பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் தமிழர்களுக்கு எதிரான கருத்து ஒன்றிய அமைச்சர் மன்னிப்பு கோரினால் ஏற்கப்படுமா?தமிழக அரசு விளக்கம் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலஜே, செய்தியாளர் சந்திப்பை நடத்தி மன்னிப்பு கோரினால் ஏற்கப்படுமா என்று அரசு தரப்பில் விளக்கமளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபேயில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த நபர் தான் காரணம் என்று ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இரு பிரிவினரிடையே கலகலத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷோபா கரந்தலஜே சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், எந்த உள்நோக்கமும் இல்லாமல் வேறு இரு நிகழ்வுகளை சுட்டிக்காட்டி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

பெங்களூருவிலும் இது சம்பந்தமாக பதியப்பட்ட வழக்குக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அவர் தனது கருத்துக்கு எக்ஸ் தளத்தில் மன்னிப்பும் கோரியுள்ளார் என்று கூறப்பட்டது. அதற்கு, காவல்துறை தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், மன்னிப்பு கோரும் விவகாரம் தொடர்பாக அரசின் கருத்தை அறிய வேண்டும் என தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதி, இதுபோன்ற வழக்கில் பொதுக்கூட்டத்தில் மன்னிப்பு கோர வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல செந்தியாளர் சந்திப்பை நடத்தி மனுதாரர் மன்னிப்பு கோரினால் ஏற்றுக் கொள்ளப்படுமா என்று அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 31ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

 

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு