இடாநகர்: அருணாசலப்பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 60 தொகுதிகளில் 46 தொகுதிகளை கைப்பற்றி பாஜ வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக அருணாசலப்பிரதேசத்தில் ஆட்சியை பாஜ தக்கவைத்துக்கொண்டது. மாநில முதல்வராக பெமா காண்டு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இவர் எல்லை மாவட்டமான தவாங்கின் முக்தோ சட்டமன்ற தொகுதியில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது.
மூன்றாவது முறையாக அருணாசலப்பிரதேச முதல்வராக பெமா காண்டு நேற்று பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் கேடி பர்நாயக் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜ தலைவர் ஜேபி நட்டா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
* 3 அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுப்பு
அருணாசல் முதல்வர் பெமா காண்டு , துணை முதல்வர் சவ்னா மெய்ன் மற்றும் 10 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். ஆனால் பெமாகாண்டுவின் கடந்த ஆட்சியில் கிராமப்புற வேலைகள் துறை அமைச்சர் ஹோன்சுன் நங்கண்டம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அலோ லிபாங், சுற்றுலா துறை அமைச்சர் நகப் நாலோ ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. அமைச்சரவையில் 8 பேர் புதிய முகம். 10 ஆண்டுகளுக்கு பிறகு அருணாச்சல் அமைச்சரவையில் பெண்ணுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.