சாயல்குடி: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1.25 கோடி மதிப்பிலான 2.5 டன் பீடி இலை பண்டல்கள், லாரி, காரை சாயல்குடி அருகே போலீசார் பறிமுதல் செய்தனர். 2 டிரைவர்களை கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி போலீசார், நரிப்பையூர் ஐந்து ஏக்கர் கடற்கரை பகுதியில் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடற்கரையில் நின்றிருந்த ஒரு லாரியை சோதனையிட்டதில், 100 மூட்டைகளில் பீடி இலை பண்டல் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து லாரி டிரைவரான உசிலம்பட்டியை சேர்ந்த தாமு, உடன் காரில் வந்த தூத்துக்குடியை சேர்ந்த பொன்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், நரிப்பையூர் கடல் மார்க்கமாக இலங்கைக்கு பீடி இலை கடத்தப்படுவது தெரிய வந்தது. பீடி இலைக்கு சொந்தமானவர் யார்? கடத்தலுக்கு உடந்தையாக இருந்தது யார் என போலீசார், கடலோர போலீசார் மற்றும் ராமநாதபுரம் சுங்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். பிடிபட்டுள்ள 2.5 டன் பீடி இலையின் சர்வதேச மதிப்பு ரூ.1 கோடியே 25 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.