அமராவதி: மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி மாவட்டத்தில் வரூத்-மோர்ஷி தொகுதியின் சுயேட்சை எம்எல்ஏ மற்றும் துணை முதல்வர் அஜித் பவாரின் ஆதரவாளருமான தேவேந்திர புயார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது: ஒரு பெண் அழகாக இருந்தால் அவள் விவசாயிகளை திருமணம் செய்ய விரும்ப மாட்டாள். அவள் வேலை செய்யும் ஆணை தேர்வு செய்கிறாள். இரண்டாவதாக அதாவது சற்றே அழகு குறைந்த பெண்கள் மளிகை கடை போன்றவற்றை நடத்துபவர்களை விரும்புகிறார்கள். மூன்றாவது இடத்தில் இருக்கும் பெண் ஒரு விவசாயியின் மகனை திருமணம் செய்து கொள்வதற்கு விரும்புகிறாள். அத்தகைய திருமணத்தில் குழந்தைகளும் நல்ல தோற்றத்தில் இருப்பது இல்லை” என்று கூறியிருந்தார். எம்எல்ஏவின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏவும் முன்னாள் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சருமான யஷோமதி தாகூர் பெண்கள் குறித்து அவர் இவ்வாறு பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்களை இவ்வாறு வகைப்படுத்துவதை யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். சமூகம் உங்களுக்கு பாடம் கற்பிக்கும் என்றார்.