சீர்காழி : சீர்காழி அருகே கடற்கரையில் மர்மப்பொருள் கரை ஒதுங்கியது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நாயக்கர்குப்பம் கடற்கரையில் நேற்று மர்மப்பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதை பார்த்த மீனவர்கள், கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், பூம்புகார் கடற்கரை காவல்நிலைய போலீசார் திருமலை, கணேஷ்குமார், அகரமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதில், கூம்புவடிவிலான மர்மப்பொருள் கரை ஒதுங்கியிருந்ததும், அந்த மர்மப்பொருளில் ஆபத்து தொடாதே, போலீசாருக்கு அறிவிக்கவும் என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்ததும், கிரீன்ஸ்டார் சிக்னல் டிவைஸ் என்றும் அச்சிடப்பட்டிருந்ததும், இந்த மர்மபொருள் ஒன்றரை அடி நீளம் இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து மர்மப்பொருளை கைப்பற்றிய போலீசார், கப்பலுக்கு பயன்படுத்தப்படும் தளவாட பொருளா அல்லது வெடி பொருளா என தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். சென்னையில் உள்ள கடலோர காவல் குழும ஆய்வகத்தில் ஆய்வு செய்வதற்காக மர்மப்பொருள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிகிறது. நாயக்கர்குப்பம் கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருளால் மீனவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.