சென்னை: 2024-25ம் கல்வியாண்டு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில் இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 6ம் தேதி தொடங்கி, ஜூன் 11ம் தேதியுடன் நிறைவு பெற்றது. அதன்படி, 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பப் பதிவு செய்து இருந்ததாக தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்தது. விண்ணப்பப் பதிவு செய்தவர்களில், 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியும், அவர்களில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 853 பேர் சான்றிதழ்களை பதிவேற்றமும் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவர்கள் அனைவருக்கும் ரேண்டம் எண்ணும் ஜூன் 12ம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 13ம் தேதி முதல் 30ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத்தொடர்ந்து ஜூலை 10-ம்தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. எனவே, அட்டவணைப்படி, இன்ஜினியரிங் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. மேலும் கலந்தாய்வு குறித்த அட்டவணையும் வெளியாக இருக்கிறது.