சென்னை: வழக்கறிஞர் சங்க தேர்தலை ஆகஸ்டுக்குள் முடிக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் சங்கத்தில் 2 முறை பொறுப்பில் இருந்தவர்கள் 3-வது முறையாக போட்டியிடக்கூடாது என பார் கவுன்சில் அறிவித்திருந்தது. பார் கவுன்சில் அறிவிப்பை எதிர்த்து எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவராக இருந்த எஸ்.சந்தன் பாபு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை ஐகோர்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜனநாயகத்தில் பதவிக்காலம் முடிந்த பின்னர் நிர்வாகிகள் பதவியில் தொடர அனுமதிக்க முடியாது. தேர்தலுக்கு போதிய பாதுகாப்பு வழங்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டதுடன் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.