இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘இன்று வங்கிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. நாளை திங்கட்கிழமை வங்கி கிளைகள் செயல்படும். அப்போது வங்கி ஊழியர்களிடம் ஆலோசித்து பணத்தை மாற்ற என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று கலந்தாலோசிக்க உள்ளோம். கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் வங்கி கிளைகளில் ரூ.2 ஆயிரம் நோட்டை மாற்ற சிறப்பு கவுன்டர்கள் உருவாக்கப்படும். அதே நேரத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வாடிக்கையாளர்கள் ஒருவர் பின் ஒருவராக வங்கிகளுக்கு வரும் வகையில் வரிசையில் நிற்க ஏற்பாடு செய்யப்படும். கூட்டம் அதிகமானால் சாமியானா பந்தலும் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.
அதே நேரத்தில் வயதானவர்கள் எளிதாக பணத்தை மாற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும். ஒருவர் ஒரே நேரத்தில் பத்து 2 ஆயிரம் ரூபாய்களை மாற்றலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எனவே, வங்கி வாடிக்கையாளர்கள் ரூபாய் நோட்டுக்களை மாற்ற வரும் போது, அவர்களுக்கு பணம் வழங்குவதற்காக கூடுதலாக பணத்தை வங்கிகளில் இருப்பு வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.