சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முடியும்வரை அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மேல் முறையீட்டு மனு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், வங்கி ஆவணங்களை கோரி மேல்முறையீடு செய்ய உள்ளதாலும், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளி வைக்க வேண்டும் என கோரப்பட்டது.
இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ம.கவுதமன், தற்போது வரை தங்களுக்கு வங்கி தொடர்பான விடுபட்ட ஆவணங்களை வழங்கவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து வங்கி தொடர்பான ஆவணங்களை வழங்கக்கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை வரும் 8ம் தேதிக்கும் அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பை தள்ளி வைக்கக் கோரிய மனு மீதான விசாரணையையும் 8ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.