12 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் 172 ரன்னுக்கு சுருண்டது. இதையடுத்து, 185 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம், மழையால் பாதிக்கப்பட்ட 4ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன் எடுத்திருந்தது. ஜாகிர் ஹசன் 31, ஷத்மன் 9 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஜாகிர் 40, ஷத்மன் 24, கேப்டன் நஜ்மல் உசைன் 38, மோமினுல் ஹக் 34 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். வங்கதேசம் 56 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. முஷ்பிகுர் 22, ஷாகிப் ஹசன் 21 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகனாக லிட்டன் தாஸ், தொடர் நாயகனாக மெஹிதி ஹசன் மிராஸ் விருது பெற்றனர். வங்கதேசம் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி பாகிஸ்தானை முதல் முறையாக ஒயிட்வாஷ் செய்தது. பாகிஸ்தானுடன் 7 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ள வங்கதேசம் முதல் முறையாக தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.