பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் ஒருவர் கைதானதாக பரவிய தகவலில் உண்மையில்லை: என்.ஐ.ஏ விளக்கம்

பெங்களூரு: பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி 2 குண்டுகள் வெடித்தன. அந்த குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ) ஒப்படைக்கப்பட்டது. குண்டு வெடித்த மார்ச் 1ம் தேதியன்றே ஓட்டல் மற்றும் அப்பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேகத்திற்குரிய நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டது. அந்த நபர் ஓட்டலில் வெடிகுண்டு இருந்த பையை வைத்துவிட்டு, பல்லாரிக்கு சென்றதை என்.ஐ.ஏ கண்டுபிடித்தது. ராமேஸ்வரம் கபே ஓட்டலில் குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்படும் அந்த நபரின் புகைப்படங்களை கடந்த 6ம் தேதி வெளியிட்ட என்.ஐ.ஏ, குற்றவாளி தொடர்பான துப்பு கொடுப்பவருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்குவதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், குண்டுவெடிப்பு வழக்கில் பல்லாரியில் ஒரு நபரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்ததாக நேற்று ஊடகங்களில் செய்தி வெளியானது. குண்டுவெடிப்பு குற்றவாளி போன்ற தோற்றத்தில் இருந்த நபரை என்.ஐ.ஏ கைது செய்து அவரை பெங்களூருவிற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்திவருவதாகவும் தகவல் பரவியது. இவர் முக்கியமான குற்றவாளியாக இருக்கலாம் என்றும் இத்தகவல் காட்டுத்தீயாய் பரவ, என்.ஐ.ஏ அத்தகவலை மறுத்தது.
ராமேஸ்வரம் குண்டுவெடிப்பு வழக்கில் ஒரு நபரை என்.ஐ.ஏ கைது செய்ததாக பரவிய தகவலில் உண்மையில்லை என்றும், குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்றும் என்.ஐ.ஏ தெளிவுபடுத்தியது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது