*போலீசார் திருப்பி அனுப்பினர்
வாணியம்பாடி : உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை வருகிற 29ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் ஆடு, மாடு மற்றும் ஒட்டகங்களை குர்பானிக்காக (பலியிடுதல்) பயன்படுத்துவார்கள். இதனால், ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையின்போது அதிக அளவிலான ஆடு, மாடு ஆகியவை வாணியம்பாடிக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படும்.
அந்த வகையில், வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் இர்ஷாத் என்பவர் ஒட்டகம் ஒன்றை இறைச்சிக்காக நேற்று முன்தினம் வாங்கி வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் நேதாஜி நகர் பகுதியில் உள்ள இர்ஷாத் வீட்டிற்கு நேரில் சென்று ஒட்டகத்தை மீட்டு, இர்ஷாத்திடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, இர்ஷாத் ஒட்டகத்தை பெங்களூரு பகுதியில் இருந்து வாங்கி வந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரிடம் பேசிய வருவாய் துறையினர் மற்றும் போலீசார், தமிழகத்தில் ஒட்டகம் குர்பானி கொடுப்பதற்கு அனுமதி இல்லை. எனவே ஒட்டகத்தை வாங்கி வந்த இடத்திற்கே திருப்பி அனுப்பும்படியும், மீறி ஒட்டகம் குர்பானி கொடுக்கப்பட்டால் கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, இர்ஷாத் ஒட்டகத்தை வாங்கி வந்த இடத்திற்க்கே திருப்பி அனுப்பி வைத்தார்.