Saturday, September 28, 2024
Home » ‘உலகமகா நடிப்புடா சாமி…’ ஒரு கை விரலில் ‘காயம்’… இன்னொரு கையில் ‘கட்டு’… பொய்யையே மிஞ்சும் அண்ணாமலையின் ‘பேண்டெய்டு’ அலப்பறை

‘உலகமகா நடிப்புடா சாமி…’ ஒரு கை விரலில் ‘காயம்’… இன்னொரு கையில் ‘கட்டு’… பொய்யையே மிஞ்சும் அண்ணாமலையின் ‘பேண்டெய்டு’ அலப்பறை

by Ranjith

கோவை: ‘உலகமகா நடிப்புடா சாமி…’ என்று சொல்லும் அளவுக்கு அண்ணாமலையின் பொய்யையே மிஞ்சும் பேண்டெய்டு அலப்பறை வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு கையில் விரல் காயம் ஏற்பட்டதற்கு, இன்னொரு கை விரலில் பேண்டெய்டு ஒட்டுகிறார். ‘என் மண் என் மக்கள்’ என்ற கோஷத்துடன் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கோவை மாவட்டத்தில் 4 நாட்கள் அவரது பாதயாத்திரை நடந்தது. பாதயாத்திரை என்று கூறி ரத யாத்திரையாக மாற்றி உலா வந்ததும், மக்கள் யாரும் தன்னுடன் செல்பி எடுக்க முன்வராததால் தனக்குத்தானே செல்பி எடுத்துக்கொண்டதும், யாத்திரை என்ற பெயரில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி மக்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டதுமே அவரது பாதயாத்திரையில் காமெடியாக இருந்தது.

இவை அனைத்துக்கும் உச்சகட்டமாக ஒரு காமெடி பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் நடந்திருக்கிறது. பாதயாத்திரை என்று கூறிக்கொண்டு வழக்கம்போல அண்ணாமலை திறந்தவெளி சொகுசு பஸ்சில் வந்து நின்றார். திடீரென அவர் ஏதோ கையில் கடித்துவிட்டதுபோலவும், காயம்பட்டுவிட்டதுபோலவும் வலது கையை உதறிக்கொண்டே இருந்தார். ‘மக்கள் அச்சச்சோ…’ என்று உச்.. கொட்டுவார்கள் என்று நினைத்தாரோ என்னவோ ெகாஞ்ச நேரம் கையை உதறிவிட்டு ஒரு கட்டத்தில் வலது கையின் கட்டை விரலில் காயம்பட்டதுபோல காட்டினார். பின்னர் பேச ஆரம்பித்தார். அப்போது அவர் மைக்கை காயம்பட்டதாக காட்டிய வலது கையில்தான் பிடித்துக்கொண்டிருந்தார்.

பக்கத்தில் நின்றிருந்த மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் அண்ணாமலையின் காயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றபடி அங்குமிங்கும் பார்த்தார். பின்னர் ஒருவர் மூலம் ‘பேண்டெய்டு’ பெற்ற அந்த நபர் அண்ணாமலையின் இடது கையை பிடித்தார். என்னடா இது வலது கையில் காயம்பட்டது… இடது கையை பிடிக்கிறாரே என்று அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க… அண்ணாமலையும் இடது கையை கொடுத்தார். அவரது கையை பிடித்த அந்த நபர் ஆட்காட்டி விரலில் கட்டும் போட்டார்.

பொறுமையாக அதை அண்ணாமலை பார்த்தபடியே இருந்தார். கட்டுபோட்ட பின்னரும் கட்டுப்போட்ட விரலை பார்த்துவிட்டு பேசிக்கொண்டிருந்தார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள், ‘உண்மையிலேயே நீ நடிகன்தான்பா… உலகமகா நடிப்புடா சாமி…’ என்று கிண்டலடித்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே தினமும் ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டும் வரும் அண்ணாமலை, இந்த வீடியோவுக்கு எல்லருமே பிரமிக்கும் வகையில் ஒரு விளக்கம் கொடுத்தாலும் ஆச்சரியப்படுத்துவதற்கு இல்லை.

You may also like

Leave a Comment

nine + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi