கூடுவாஞ்சேரி: வண்டலூரில் வீடு மற்றும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கூடுவாஞ்சேரி தாசில்தார் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் உள்ள வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வீடு மற்றும் வீட்டுமனை பட்டா கேட்டு பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தினர். இதில், சிபிஐஎம்எல் கட்சியின் கூடுவாஞ்சேரி நகர செயலாளர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார்.
இதில், தாசில்தார் புஷ்பலதாவை சந்தித்து ஆதிதிராவிடர் மக்கள் குடியிருக்கும் சர்வே என் 114.ல் நிலமோசடி கும்பல் பதிவு செய்துள்ள ஆவனத்தை ரத்து செய்யக் கோரியும், ஆதிதிராவிடர் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை தனியார் பொறியியல் கல்லூரியிடம் இருந்து மீட்டு தரக்கோரியும் சர்வே என் 131ல் வண்டலூரில் 3 தலை முறையாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க கோரியும் மனு கொடுத்தனர்.இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.