Monday, July 1, 2024
Home » கப்பதகுட்டே வனப்பகுதியில் குவாரி தொழில் நடத்த தடை: அரசின் உத்தரவை உறுதி செய்த உயர்நீதிமன்றம்

கப்பதகுட்டே வனப்பகுதியில் குவாரி தொழில் நடத்த தடை: அரசின் உத்தரவை உறுதி செய்த உயர்நீதிமன்றம்

by Ranjith

பெங்களூரு: யுனேஸ்கோ தர சான்றிதழ் பெற்றுள்ள கப்பதகுட்டா வனப்பகுதியை சுற்றி 1 கி.மீட்டர் சுற்றளவில் குவாரி தொழில் நடத்த தடை விதித்து மாநில அரசு பிறப்பித்த உத்தரவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மாநிலத்தின் கதக் மாவட்டத்தில் உள்ள கப்பதகுட்டா வனப்பகுதியை யுனேஸ்கோ பாரம்பரிய வனப்பகுதி பட்டியலில் சேர்த்துள்ளது. அதை தொடர்ந்து கப்பதகுட்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வன பகுதியாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கடந்த 2022 செப்டம்பர் 22ம் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட செயல்படை (சுரங்கம்), மாவட்ட மணல் மேற்பார்வை குழு, மாவட்ட கல் குவாரி உரிமம் வழங்கல் மற்றும் புதுப்பித்தல் ஆணையம் ஆகியவற்றின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கப்பதகுட்டா வன பகுதியை பாதுகாக்கப்பட்ட வன பகுதி பட்டியலில் சேர்த்துள்ளதுடன் யுனேஸ்கோ நிறுவனம் பாரம்பரியம் வன பகுதியாக எடுத்து கொண்டுள்ளதால், வனப்பகுதியை சுற்றி 1 கி.மீட்டர் சுற்றளவில் கல் குவாரிகள் நடத்த தடை விதிக்கும் மகத்துவமான முடிவு எடுக்கப்பட்டது.

இதை அரசாணையாக கடந்த 2022 டிசம்பர் 5ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. அரசின் முடிவை எதிர்த்து எஸ்.ஆர்.பல்லாரி, ஏ.ஜெ.களரே, ஷிவகங்கா ஸ்டோன் கிரிஷர் இண்டஸ்ட்ரீஸ் உள்பட பல குவாரி நிறுவனங்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அம்மனு தலைமை நீதிபதி என்.வி.ஆஞ்சாரியா மற்றும் நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்ஷீத் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதம் செய்தனர்.

அதற்கு மறுப்பு தெரிவித்து அரசு தலைமை வழக்கறிஞர் சசிகிரண்ஷெட்டி வாதம் செய்தார். வழக்கறிஞர்கள் வாதம் முடிந்ததை தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கப்பதகுட்டா வனப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்துள்ளது. அதை காப்பாற்றும் நோக்கத்தில் குவாரி தொழில் நடத்த தடை விதித்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சரியானது என்று கூறி குவாரி நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

You may also like

Leave a Comment

2 + sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi