பல்லடம் அருகே துணிகரம் வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகை கொள்ளை

பல்லடம் : பல்லடம் அருகே அல்லாளபுரத்தில் பூட்டிய வீட்டில் கதவை உடைத்து 30 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அல்லாபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது ராயல்பார்க். இங்கு ராஜேந்திர பிரசாத் (64) என்பவர் தனது மனைவி வரலட்சுமியுடன் (63) வசித்து வருகிறார். இவர்களுக்கு பாலவிஜய் என்கிற மகனும், நிவேதா என்கிற மகளும் உள்ளனர். பால விஜய் டென்மார்க் நாட்டிலும், மகள் நிவேதா திருமணமாகி பெங்களூருவில் வசித்து வருகின்றனர்.

ராஜேந்திரபிரசாத் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு இருவரும் முசிறிக்கு காரில் சென்றுவிட்டனர். நேற்று காலை ராஜேந்திர பிரசாத் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர் இது குறித்து பல்லடம் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் வீட்டுக்குள் சோதனையிட்டபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் திருட்டில் ஈடுபட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts

சென்னையில் மணக்கும் மதுரை!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: வெளி மாநிலத்தில் இருந்து மெத்தனால் வாங்கி விற்பனை

நீட் தேர்வு முறைகேடு குறித்து மக்களவையில் நாளை விவாதம் நடத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கடிதம்