உத்திரமேரூர்: உத்திரமேரூர் பேரூராட்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாதிரியம்மன் கோயில் 42ம் ஆண்டு பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது. முன்னதாக காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் மஞ்சலாடை அணிந்தவாறு ஸ்ரீசுந்தர வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து வாணவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க பால்குடங்களுடன் சன்னதி தெரு, பஜார் வீதி, கேதாரீஸ்வரர் கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர்.
பின்னர் பக்தர்கள் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனர். கோயில் வளாகத்தில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.