இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: தமிழ்நாடு முழுவதும் சமச்சீர் வளர்ச்சி பெற வேண்டும் என்ற சமூக நீதி கண்ணோட்டம் கொண்ட நிதி நிலை அறிக்கை தடைகள் பலவற்றையும் தாண்டி சாதனை படைக்கும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு, மாநில அரசுகளின் வருமானம் குறைந்து-செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், இளைஞர்களுக்கு ஒரு வளமான வாழ்க்கையை உருவாக்கும் நோக்கிலும் சிறந்த முறையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: எரிவாயு மானியம், நியாய விலைக் கடைகளில் கூடுதல் சர்க்கரை மற்றும் உளுத்தம் பருப்பு, மாதம் ஒரு முறை மின் கட்டணம் உயர்வு மற்றும் சம்பள உயர்வு ஆகியவை நிறைவேற்றப்படாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ்: கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பாசனக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களும், சாதிவாரி கணக்கெடுப்பும் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளிக்கும் போதாவது புதிய திட்டங்களை நிதியமைச்சர் அறிவிக்க வேண்டும். தமிழகத்தின் நிதிநிலையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழக மக்களுக்காக வளமான தமிழகத்தை ஏற்படுத்த மக்களுக்கான ஆட்சியாக தமிழக அரசு செயல்பட வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: தமிழக அரசு இதுவரை வாங்கிக் குவித்துள்ள கடனுக்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.63,722 கோடி வட்டி செலுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் ரூ.175 கோடி வட்டி செலுத்த வேண்டியுள்ளது. இரு நாட்கள் செலுத்த வேண்டிய வட்டியை சேமித்தால் ஒரு மருத்துவக் கல்லூரியை கட்டிவிட முடியும். புதிய கொள்கைகளின் மூலம் தமிழகத்தின் உற்பத்தியை அதிகரித்தல், வரியில்லாத வருமானத்தை அதிகரித்தல், செலவுகளைக் குறைத்தல் ஆகியவற்றின் மூலம் தமிழ்நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டு, முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
பாஜ தலைவர் அண்ணாமலை: ஆறுகள் மறுசீரமைப்பு, புதிய பேருந்துகள் என்பவை போன்ற அறிவிப்புகள், ஆண்டுதோறும் பட்ஜெட் அறிக்கையில் மட்டுமே இடம்பெறும் அலங்கார வார்த்தைகள்.
அமமுக பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன்: ஒரு லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2500 கோடி ரூபாய் அளவிற்கு கல்விக்கடன் வழங்கப்படும் என அறிவித்திருக்கும் திமுக அரசு, கல்விக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை வெளியிடாதது தமிழக இளைஞர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா உள்ளிட்டோரும் கருத்து தெரிவித்துள்ளனர்.