மதுரை: பக்ரீத் பண்டிகையின்போது மாநகராட்சி அனுமதிக்காத இடங்களில் ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க முடியாது என்று ஐகோர்ட் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. ஆடு, மாடுகளை சட்டவிரோதமாக அனைத்து பகுதிகளிலும் வெட்டி பலியிட தடை விதிக்கக் உத்தரவிடக் கோரி ரங்கராஜ நரசிம்மன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். பக்ரீத் பண்டிகையின்போது இஸ்லாமியர்கள் குர்பானி என்ற பெயரில் ஆடு, மாடுகளை பலியிடுவதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, அரசிடம் விளக்கம் பெறாமல் பக்ரீத் பண்டிகையின் போது ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துவிட்டது.
தொடர்ந்து பக்ரீத் பண்டிகை நெருங்கியுள்ள வேளையில் அவசரமாக வழக்கு தாக்கல் செய்வதன் காரணம் என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கடந்த ஆண்டு நடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டும் நீங்கள் ஏன் கடைசி நேரத்தில் மனுத்தாக்கல் செய்கிறீர்கள்? என்றும் நீதிபதிகள் வினவினர். மனு குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.