திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து சட்டப்பேரவை பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ டெல்லி மேலிடத்தை அணுகியிருந்தார். திருநெல்வேலி தொகுதி உங்களுக்கு தான் என்று டெல்லி மேலிடம் அவருக்கு பச்சைக்கொடி காட்டியது. இதைத் தொடர்ந்து கடந்த 6 மாதமாகவே திருநெல்வேலியில் நாடாளுமன்ற தேர்தல் பணியை நயினார் நாகேந்திரன் தொடங்கினார். வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் பாஜவின் 3வது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிட்டது. அதில் தமிழகத்தில் 9 தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அந்த பட்டியலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதை பார்த்து நயினார் நாகேந்திரன் உள்பட அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். சொல்லப்போனால் பாஜவினரே அதிர்ந்து போயினர். ஏனென்றால் இந்த தொகுதி கூட்டணி கட்சியான தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கூட்டணி தர்மத்தை பாஜ மீறிவிட்டதா? என்று தமாகாவினரும் அதிர்ச்சியடைந்தனர். தமாகா தரப்பில் வேட்பாளரும் தயாராக இருந்தார். சிறிது நேரத்தில் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுவார் என்று டெல்லி மேலிடம் அறிவித்தது. இதைத் தொடர்ந்தே அவர் அதிர்ச்சியில் இருந்து மீண்டார். ஒரு தொகுதியை மாற்றி வேட்பாளரை அறிவித்து தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்த பாஜவினரை நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர்.