தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த ஜூன் 6ம் தேதி அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறியது. இதற்கு வங்கதேசம் ‘பிபர்ஜாய்’ என பெயரிட்டுள்ளது. பிபர்ஜாய் புயல் அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் தீவிரமடைந்து வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
இந்நிலையில், குஜராத்தின் அப்தாசா தொகுதி பாஜ எம்எல்ஏ பிரத்யுமன்சிங் ஜடேஜா பிபர்ஜோய் புயலை அமைதிப்படுத்தும் நோக்கில் ஜாகாவ் கடற்கரையில் பூஜை நடத்தினார். தெய்வத்தின் ஆசீர்வாதங்கள் மற்றும் தலையீட்டை நாடுவதன் மூலம், அமைதியை கொண்டு வரவும், இப்பகுதியில் சூறாவளியால் ஏற்படும் சேதத்தைத் தடுக்கவும் முடியும் என்று நம்புவதாக ஜடேஜா கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. நெட்டிசன்கள் பாஜ.வின் மூடநம்பிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பாஜ ஆதரவாளர்கள் அவரது செயலை பாராட்டி வருகின்றனர்.