திருவனந்தபுரம்: சபரிமலை அருகே உள்ள பொன்னம்பலமேட்டில் கடந்த மே மாதம் 8ம் தேதி, சிலர் அத்துமீறி நுழைந்து பூஜை நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. விசாரணையில் பூஜை நடத்தியது நாராயணன் என்பவரின் தலைமையிலான சிலர் என்பது தெரியவந்தது. இதில் பொன்னம்பலமேட்டுக்கு செல்ல பணம் வாங்கி கொண்டு அனுமதித்த வனத்துறை ஊழியர்கள் ராஜேந்திரன் கருப்பையா, சாபு மேத்யூ, இடுக்கியை சேர்ந்த சரத், சூரத் சுரேஷ், குமுளி சேர்ந்த சந்திரசேகர் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக நாராயணன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை பத்தனம்திட்டா நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.